ஓ.பி.ஆருக்கு வெண்கல சிலை அமைச்சர் பொன்முடி தகவல்
திண்டிவனம் : ஓ.பி. ராமசாமி ரெட்டியார் தமிழகத்திற்கே சொந்தமானவர் என அமைச்சர் பொன்முடி கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஓமந்துாரில் நேற்று காலை நடந்த ஓ.பி.ஆர்.பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:
மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஓமந்துாரில், ஓ.பி.ஆர். நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டது. தேவதாசி முறை ஒழிப்பு சட்டம், கோவில் நுழைவு அதிகாரமளிப்பு சட்டம், ஜமீன்தார் இனாம் முறை ஒழிப்பு போன்ற சட்டங்களை கொண்டு வந்தவர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார். சமரச சுத்த சன்மார்க்கம் அமைவதற்கு காரணமாக இருந்தார்.
ஓ.பி.ஆர்., ஒரு சமுதாயத்திற்கு மட்டும் சொந்தமானவர் இல்லை. தமிழகத்திற்கே சொந்தமானவர். அவருக்கு, சென்னை அரசினர் தோட்டத்தில் முழு உருவ வெண்கல சிலை வைப்பது குறித்து, தமிழக முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.