மின்னணு துறை உற்பத்தி ரூ.17.20 லட்சம் கோடிக்கு மேல் உயரும்
புதுடில்லி:பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்களால், இந்திய மின்னணு உற்பத்தி துறை அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் இரட்டிப்பாக 17.20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயரும் என, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் லித்தியம் பேட்டரி, கோபால்ட் பொருட்கள், துத்தநாகம் மற்றும் மொபைல் போன் பேட்டரி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சில மூலப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் மீதான அடிப்படை சுங்க வரி பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. இது, உள்நாட்டு பேட்டரி உற்பத்தியை ஊக்குவிக்கும்.
மேலும் பட்ஜெட்டில், கூடுதலாக இந்திய ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்காக 2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அடுத்த நிதியாண்டில் மத்திய அளவில் 20 ஏ.ஐ., தரவு கண்காணிப்பு மையங்களை நிறுவுவதையும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் 80 ஏ.ஐ., ஆய்வகங்களை நிறுவுவதையும் அரசு நோக்கமாக கொண்டுள்ளது.
மின்னணு துறையில் தற்போது 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உள்ளன. அடுத்த நான்கு ஆண்டுகளில் இது நான்கு மடங்காக அதிகரிக்கக்கூடும். மின்னணு துறை உற்பத்தியின் வெற்றிகளை எந்தவொரு துறைக்கும் மாதிரியாக பயன்படுத்தலாம்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்களால், இந்திய மின்னணு உற்பத்தி துறை அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் இரட்டிப்பாக 17.20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.