ஒரக்காட்பேட்டை மேம்பாலத்தில் விளக்குகள் அமைக்க கோரிக்கை
மறைமலை நகர்:செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பழத்தோட்டம் பகுதியில் பாலாற்று நடுவே திம்மாவரம் பழத்தோட்டம் - ஒரக்காட்பேட்டை செல்லும் மேம்பாலம் 2017ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலம் வழியாக ஒரக்காட்பேட்டை, மாம்பாக்கம், சாலவாக்கம், காவாந்தண்டலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மேம்பாலம் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டத்தை இணைக்கும் பாலமாக உள்ளது. இந்த பாலம் வழியாக செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அடிப்படை தேவைகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
எனவே இந்த மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.