கவர்ச்சி திட்டங்களை அறிவித்து பலரிடம் ரூ.80.50 லட்சம் மோசடி செய்தவர் கைது

கள்ளக்குறிச்சி : கவர்ச்சி திட்டங்களை அறிவித்து பலரிடம் ரூ.80.50 லட்சம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மைக்கேல்புரத்தை சேர்ந்தவர் ஜோசப் மகன் ஜான்கென்னடி,49; இவர், கடந்த 2023ம் ஆண்டு கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில், மேல்சிறுவள்ளூர் கூட்ரோட்டில் பீனிக்ஸ் சூப்பர் மார்கெட் வைத்திருந்தார்.

அப்போது, அவர் தங்க சேமிப்பு திட்டம், கார் மற்றும் நிலம் வாங்கும் திட்டம், மளிகை பொருட்கள் இரட்டிப்பு திட்டம், ஸ்டாக் பாயின்ட் திட்டம் மற்றும் அதிக முதலீடு செய்தால் சிங்கப்பூர் செல்லும் திட்டம் உட்பட பல திட்டங்கள் அறிவித்தார்.

அதனை நம்பி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் ரூ.80.50 லட்சத்தை வசூலித்தவர் திடீரென சூப்பர் மார்க்கெட்டை மூடிவிட்டு தலைமறைவானார்.

அதில் ரூ.10 லட்சம் கட்டி ஏமாற்றம் அடைந்த சேலம், அழகாபுரம் சவுந்தரராஜன்,69; விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, ஜான்கென்னடியை தேடி வந்தனர்.

அதில் கிடைத்த தகவலின்பேரில் சென்னையில் பதுங்கியிருந்த ஜான்கென்னடியை, இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப் இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டுகள் அன்பழகன், இளையராஜா ஆகியோர் கடந்த 31ம் தேதி கைது செய்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு வைப்பீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

கைதான நபர் நடத்திய பீனிக்ஸ் சூப்பர் மார்கெட்டில் பணம் கட்டி ஏமாந்து, இதுவரை புகார் அளிக்காதவர்கள், விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவை அணுகி, இவ்வழக்கில் இணைந்து கொள்ள வேண்டும். விபரம் தேவைப் படுவோர் 04146 250366 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தெரிவித்துள்ளார்.

Advertisement