பதினைந்து ஆண்டுகளாக பதவி உயர்வு இழுபறி; கல்வித்துறை அலுவலர்கள் புலம்பல்

சிவகங்கை; ''கல்வித்துறையில் இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட்களுக்கு 15 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்க அரசு மறுத்து வருகிறது,'' என, கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து சிவகங்கையில் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில அமைப்பு செயலாளர் கந்தசாமி கூறியதாவது: துறை சார்ந்த கணக்கு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலகங்களில் பி.ஏ., (நிர்வாகம்) பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

கல்வித்துறை அலுவலர்களுக்கு இணை, துணை இயக்குனர் பதவி ஒதுக்கீட்டை அரசு உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும்.

பணியிறக்கப்பட்ட இளநிலை உதவியாளர்களுக்கு தேர்வு நிலை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.,14ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

Advertisement