நீர்நிலைகளில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை,பெரியபாளையத்தை அடுத்த, கொசவன் பேட்டை, அஞ்சாத்தம்மன் கோவிலைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 51; நேற்று முன்தினம் மதியம் முதல், இவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அன்றிரவு, இவரது வீட்டின் அருகில் இருந்த குளத்தில் சடலமாக கிடந்தார். பெரியபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பிரசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவன் பலி



சென்னை, பாடியைச் சேர்ந்தவர் சுரேஷ், 41. நேற்று முன்தினம் மதியம், குடும்பத்துடன் மாளந்துார் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று, பொங்கல் வைத்து சுவாமி கும்பிட்டனர்.

மாலையில் இருந்து, இவரது மகன் ஜனார்த்தனத்தை, 15, காணவில்லை. அருகில் உள்ள ஆரணி ஆற்றிற்கு சென்றதை சிலர் கூறியதை அடுத்து, அங்கு சென்று பார்த்தனர். அப்போது, ஆற்றில் விழுந்து கிடந்தது தெரிந்தது.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும், பெரிய பாளையம் போலீசார் வழக்கு பதிந்துவிசாரிக்கின்றனர்.

Advertisement