மஹாராஷ்டிரா உங்களை மன்னிக்காது ராகுல்! பட்னவிஸ் கண்டிப்பு
மும்பை; மஹாராஷ்டிரா மக்கள் காங். எம்.பி., ராகுலை மன்னிக்க மாட்டார்கள் என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் விமர்சித்துள்ளார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசினார். அப்போது மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் புதியதாக 70 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இது ஹிமாச்சலபிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை அளவு கொண்டது என்று கூறி இருந்தார்.
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களுக்காக இப்படி போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும அவர் குற்றம்சாட்டி இருந்தார். அவரது கருத்துக்கு பா.ஜ., தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந் நிலையில், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ராகுல் பேச்சை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு;
மஹாராஷ்டிராவை அவமதிப்பதற்கு பதிலாக உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சத்ரபதி சிவாஜி, அம்பேத்கர், மகாத்மா பூலே, வீர் சாவர்க்கர் ஆகியோரை அவமதித்து விட்டீர்கள்.
உங்கள் கட்சி தோற்றுவிட்டது என்பதற்காகவே மஹாராஷ்டிரா மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வழங்கிய தீர்ப்பை கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள்.
உங்களை சுயபரிசோதனை செய்து கொள்வதற்காக அவதூறுகளில் ஈடுபடுகிறீர்கள். இதை மஹாராஷ்டிரா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு பட்னவிஸ் கூறி உள்ளார்.