18 மருத்துவக் கல்லுாரிகளுக்கு யு.ஜி.சி., 'சோகாஸ்' நோட்டீஸ்

கோவை; மாணவர்களிடம் ராகிங் எதிர்ப்பு உறுதிமொழி பெறாத நாடு முழுவதும் உள்ள, 18 மருத்துவக் கல்லுாரிகளுக்கு விளக்கம் கேட்டு பல்கலை மானியக்குழு(யு.ஜி.சி.,) 'சோகாஸ்' நோட்டிஸ் வழங்கியுள்ளது.

கல்லுாரிகள், பல்கலைகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் ஆண்டுதோறும் புதிய மாணவர் சேர்க்கை நடக்கும்போது, ராகிங் நிகழும்.

இதைத் தடுக்க, யு.ஜி.சி., பல நடவடிக்கைகளை எடுத்தது. 2014ம் ஆண்டு பல்கலை, கல்லுாரி, கல்வி நிறுவனங்களில் ராகிங்கை தடுக்க, முற்றிலுமாக நீக்க, புதிய விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டன.

பல கல்வி நிறுவனங்கள் ராக்கிங் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வில்லை என, யு.ஜி.சி.,க்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ராகிங் தடுப்பு வழிமுறைகளை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என யு.ஜி.சி., சமீபத்தில் அறிவித்திருந்தது.

ராகிங் வழிகாட்டு நெறிமுறைகளில், ராகிங் எதிர்ப்புக்கு பொறுப்பேற்கும் வகையில் மாணவர்கள், பெற்றோரிடம் உறுதிமொழி பெறவேண்டும் என்ற விதி உள்ளது. இவ்விதியை நாடு முழுவதும், 18 மருத்துவக் கல்லுாரிகள் பெறவில்லை.

இதையடுத்து யு.ஜி.சி., விளக்கம் கேட்டு இந்த, 18 கல்லுாரிகளுக்கும், சோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த இரு மருத்துவக் கல்லுாரிகளும் அடங்கும்.கல்லுாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்ககூடாது என்பதற்கான விளக்கத்தை ஏழு நாட்களுக்குள் அளிக்க யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.

அவ்வாறு விளக்கம் அளிக்கவில்லை எனில், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement