ராகுல் பொறுப்பற்ற அரசியல்: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
புதுடில்லி: தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் பொறுப்பற்ற அரசியலில் ஈடுபடுவது ஆழ்ந்த வருத்தமளிக்கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்நாத் சிங் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இந்தியா-சீன எல்லை நிலைமை குறித்து ராணுவத் தளபதியின் அறிக்கை குறித்து நேற்று பார்லிமென்டில் ஆற்றிய உரையில் தவறான குற்றச்சாட்டுகளை ராகுல் முன்வைத்தார்.
ராணுவத் தலைவரின் கருத்துக்கள் இரு தரப்பினரின் பாரம்பரிய ரோந்துப் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதை மட்டுமே குறிப்பிட்டன. மத்திய அரசு இந்த விவரங்களை பார்லிமென்டில் பகிர்ந்துள்ளது.
ராகுல் கூறிய வார்த்தைகளை ராணுவ தளபதி எந்த நேரத்திலும் பேசியதில்லை. தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் பொறுப்பற்ற அரசியலில் ஈடுபடுவது ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. சீனா ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதி ஏதேனும் இருந்தால், அது 1962 மோதலின் விளைவாக அக்சாய் சினில் 38,000 சதுர கி.மீ. மற்றும் 1963 இல் பாகிஸ்தானால் சட்டவிரோதமாக சீனாவிற்குக் கொடுக்கப்பட்ட 5,180 சதுர கி.மீ. ஆகும். நமது வரலாற்றின் இந்தக் கட்டத்தைப் பற்றி ராகுல் சுயபரிசோதனை செய்து கொள்ளலாம்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.