சாம்பியன்ஸ் டிராபி: டிக்கெட் காலி * இந்தியா-பாக்., மோதலுக்கு மவுசு
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கும் போட்டிகளுக்கான டிக்கெட் சில நிமிடத்தில் காலியானது.
பாகிஸ்தானில் ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் (பிப். 19-மார்ச் 9) நடக்க உள்ளது. கடந்த 2023 உலக கோப்பை தொடரில் 'டாப்-8' இடம் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் பங்கேற்க உள்ளன. இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் இதற்கு தகுதி பெறவில்லை.
பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்தது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்க உள்ளன. இதில் வங்கதேசம் (பிப். 20), பாகிஸ்தான் (பிப். 23), நியூசிலாந்து (மார்ச் 2) அணிகளை சந்திக்க உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் வழியாக நடந்தது.
இதில் இந்தியா, பாகிஸ்தான் மோதலுக்கான டிக்கெட் விற்பனை துவங்கிய சில நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தன. 25,000 ஆயிரம் டிக்கெட்டுகளை வாங்க, 1,50,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஆன்லைனில் காத்திருந்தனர். இதனால் ஒரு மணி நேரம் தாமதம் ஆனது. பிளாட்டினம் டிக்கெட் ரூ. 48,000, கிராண்ட் பிரிவு டிக்கெட் ஒன்று ரூ. 1.8 லட்சத்துக்கு விலை போனது. தவிர, இந்தியா-வங்கதேசம், இந்தியா-நியூசிலாந்து போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கவும் கடும் போட்டி காணப்பட்டன.