இடையில் வட்டி குறைப்பு செய்தாலும் டிபாசிட் ரசீதில் குறிப்பிட்ட தொகையை வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு

நாமக்கல்: 'இடையில் வட்டி குறைப்பு செய்தாலும், டிபாசிட் ரசீதில் குறிப்பிட்ட தொகையை வட்டியுடன் சேர்த்து, வாடிக்கையாளருக்கு கூட்டுறவு கடன் சங்கம் வழங்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த அளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், 62; இவரது மகன்கள் நவீன்குமார், 34, பிரவீன்குமார், 32. இவர்கள் இருவரும் மைனராக இருந்தபோது, ஒவ்வொருவருக்கும், தலா, 18,000 ரூபாயை, 1997 பிப்ரவரியில் முருகேசனின் தந்தை கருப்பணன், அளவாய்ப்பட்டியில் உள்ள விநாயகர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், 20 ஆண்டுகளுக்கு டிபாசிட் செய்தார். டிபாசிட் செய்த தொகைக்கு ஆண்டுக்கு, 15 சதவீதம் வட்டி கணக்கிட்டு, 3 லட்சத்து, 6,448- ரூபாய், ஒவ்வொரு டிபாசிட்டிற்கும் வழங்குவதாக கூட்டுறவு சங்கம் சான்று வழங்கி உள்ளது.

இந்நிலையில், 2003ல் கருப்பணன் இறந்துவிட்டார். நவீன்குமார், பிரவீன்குமார் ஆகியோர், 18 வயது நிறைவடைந்த நிலையில், டிபாசிட் காலம் முடிந்த பின், 2016ல் கூட்டுறவு சங்கத்தை அணுகி பணம் கேட்டுள்ளனர். ஆனால், '2003 முதல் ஆண்டுக்கு, 7 சதவீதம் மட்டுமே வட்டி வழங்க உத்தரவு இருப்பதால், டிபாசிட் செய்த தொகைக்கு, 7 சதவீதம் வட்டி மட்டுமே வழங்குவோம்' என, சங்கத்தினர் தெரிவித்தனர்.

அதிர்ச்சியடைந்த நவீன்குமார், பிரவீன்குமார் ஆகியோர், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், 2018ல் கூட்டுறவு கடன் சங்கம் மீது, தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர். கூட்டுறவு சங்கம் சார்பில் யாரும் ஆஜராகாததால், நீதிமன்றம் ஒருதலைபட்ச தீர்ப்பு வழங்கியது. அவற்றை எதிர்த்து, கூட்டுறவு சங்கம் சார்பில், மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. நவீன்குமார், பிரவீன்குமார் ஆகியோரின் வழக்குகளை, 2025 ஜன., 20ல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, 3 மாதத்தில் தீர்ப்பு வழங்க, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு, மாநில நுகர்வோர் நீதிமன்றம் அனுப்பி வைத்தது.

இதையடுத்து, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், கடந்த, 20, 24, 27 ஆகிய, மூன்று நாட்கள் விசாரணை நடந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பு வழங்குவதற்கு முன், நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அதில், டிபாசிட் சான்றிதழில் உள்ளவாறு ஒவ்வொருவருக்கும், தலா, 3 லட்சத்து, 6,448- ரூபாய் வழங்கவும், முதிர்ச்சியடைந்த, 2016ல் இருந்து, பணம் வழங்கப்படும் நாள் வரை, 3 லட்சத்து, 6,448- ரூபாய்க்கு, ஆண்டுக்கு, 6 சதவீதம் வட்டி சேர்த்து வழங்கவும் கூட்டுறவு சங்கம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து, 'வரும், 24க்குள் முதிர்ச்சி தொகையும், அதன் பிந்தைய வட்டியையும் நவீன்குமாருக்கும், பிரவீன்குமாருக்கும் கூட்டுறவு சங்கம் வழங்க வேண்டும்' என, நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

Advertisement