பொன் மாணிக்கவேல் வழக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
மதுரை:சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக, சி.பி.ஐ., பதிந்த வழக்கில் ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை வழங்க, முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க, சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.
தமிழக காவல் துறையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக, பொன் மாணிக்கவேல் பணிபுரிந்தார். அப்போது, சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளனை கைது செய்தார்.
அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர் பாஷா மற்றும் கோயம்பேடு போலீசில் சிறப்பு எஸ்.ஐ.,யாக இருந்த சுப்புராஜை, 2017ல், பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இருவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, பின் ஜாமினில் வந்தனர்.
'தீனதயாளனுக்கு ஆதரவாக பொன் மாணிக்கவேல் செயல்பட்டார். என் மீது பொய் வழக்கு பதிந்தார். விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், காதர் பாஷா மனு செய்தார். சி.பி.ஐ., வழக்கு பதிந்து விசாரிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, டில்லி சி.பி.ஐ., போலீசார், பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிந்தனர். அவருக்கு, 2024 ஆக., 30ல் உயர் நீதிமன்ற கிளை முன்ஜாமின் அனுமதித்தது.
ஆரம்பகட்ட விசாரணையின் அறிக்கையை தனக்கு வழங்க, சி.பி.ஐ.,க்கு உத்தரவிடக்கோரி மதுரை கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவர், மனு செய்தார்; அதை அந்த நீதிமன்றம் திருப்பி அனுப்பியது.
இதை எதிர்த்து பொன் மாணிக்கவேல், 'ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை அளித்தால் தான், எனக்கு எதிராக எத்தகைய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற விபரம் தெரியவரும்' என, உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.
நீதிபதி பி.புகழேந்தி, சி.பி.ஐ., - எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, பிப்., 24க்கு ஒத்திவைத்தார்.