கார் மீது ஆட்டோ மோதல் சாலையில் டிராவிட் சண்டை
பெங்களூரு,: கர்நாடகாவின் பெங்களூரில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், ஆட்டோ டிரைவருடன் சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகிஉள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும், இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர் ராகுல் டிராவிட், 52. இவர், கர்நாடகாவின் பெங்களூரில் வசித்து வருகிறார்.
அங்குள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் சர்க்கிளில் இருந்து மில்லர்ஸ் ரோடு நோக்கி நேற்று முன்தினம் மாலை காரில் சென்றார். அப்போது, அவரது கார் மீது ஆட்டோ ஒன்று மோதியது. இதில் கார் சேதமடைந்தது.
இதனால் ஆத்திரமடைந்த டிராவிட், காரில் இருந்து இறங்கி வந்து, ஆட்டோ டிரைவருடன் கன்னடத்தில் வாக்குவாதம் செய்தார்.
'ஏன் பிரேக் பிடிக்காமல் காரில் மோதினாய்?' என, ஆட்டோ டிரைவரிடம் டிராவிட் கோபத்துடன் கேட்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.
டிராவிட்டை பார்த்ததும் முதலில் இன்ப அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர், பின்னர் சரிக்கு சமமாக வாக்குவாதம் செய்தார்.
கார் மீது மோதிய ஆட்டோ டிரைவர் மீது, டிராவிட் போலீசில் புகார் அளிக்கவில்லை.