40 அடி உயர கரும்புகையுடன் கழிவு எரித்ததால் மக்கள் அச்சம்

கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை அருகே, கும்மிடிப்பூண்டி அடுத்த, பன்பாக்கம் கிராமத்தில் இருந்து, குருதானமேடு கிராமம் செல்லும் சாலை அமைந்துள்ளது. அந்த சாலைக்கும், அங்குள்ள பன்பாக்கம் ஏரிக்கும் இடையே, மலை போல் கழிவு குவிக்கப்பட்டிருந்தன. அதில், தொழிற்சாலை கழிவு, அதிக அளவில் இருந்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று மதியம், அந்த கழிவை, மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியதாக கூறப்படுகிறது. மளமளவென பரவிய தீ, கட்டுக்கு அடங்காமல், கரும்புகையுடன், 40 அடி உயரத்திற்கு எரிந்தது. அருகில் உள்ள தனியார் ஐ.டி.ஐ., மற்றும் மாணவர் காப்பகத்தில் கரும்புகை சூழ்ந்ததால், மக்கள் அச்சம் அடைந்தனர்.

கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினர், தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த சம்பவம், பன்பாக்கம் கிராமத்தினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

Advertisement