'மரவள்ளி கிழங்கு விலை நிர்ணயம் கருத்து அடிப்படையில் நடவடிக்கை'

சேலம்,:சேலம் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு விலை நிர்ணயம் செய்வது குறித்த முத்தரப்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:
சேலம் மாவட்ட ஜவ்வரிசி உற்பத்தியாளர், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகளை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும்படி இக்கூட்டம் நடத்தப்பட்டது. ஜவ்வரிசி உற்பத்தியாளர், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகள் மற்றும் சேகோசர்வ், வேளாண், தோட்டக்கலை உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் மரவள்ளி கிழங்கு சாகுபடி பரப்பை கணக்கெடுத்து, தோராய உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். சேகோசர்வில் மரவள்ளி விவசாயிகளை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என, விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மரவள்ளி கிழங்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து, விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர், சேகோசர்வ் கருத்துகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சேகோசர்வ் செயலாட்சியர் கீர்த்தி பிரியதர்ஷினி, பொது மேலாளர் தெய்வமணி, வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement