அமைதியை பராமரிக்கவே தடை உத்தரவு மதுரை கலெக்டர் சங்கீதா விளக்கம்

மதுரை:'திருப்பரங்குன்றத்தில் வெளியூர் நபர்களால் பொது அமைதிக்கு பாதிப்பு வராமல் இருக்கவும், மதநல்லிணக்கம் பேணுவதற்காகவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது' என மதுரை கலெக்டர் சங்கீதா விளக்கம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: டிச. 4ல் திருப்பரங்குன்றம் பழனியாண்டவர் கோவில் தெருவில் புதிதாக மலைமேல் உள்ள தர்காவில் கந்துாரி செய்பவர்களுக்கு அனைத்து வசதியும் உள்ளன என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதாக போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் மேற்கண்ட வாசகம் நீக்கப்பட்டது.

டிச.25 காலை 9:00 மணிக்கு, கந்துாரி (ஆடு பலியிடுதல்) கொடுக்க 5 பேர் அங்கு சென்ற போது போலீசார் தடுத்ததால் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதைத் தொடர்ந்து முஸ்லிம் சமுதாயத்தினர், கலெக்டரிடம் முறையிட்டனர். இதையடுத்து டிச. 31 ல் திருமங்கலம் ஆர்.டி.ஓ., தலைமையில் அமைதி கூட்டம் நடந்தது.

இதில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழிபாட்டு முறைகளை இந்த ஆண்டிலும் தொடரவும் மலைமீது கந்துாரி கொடுக்கும் நடைமுறை தொடர்பாக, ஆவணங்களை தர்கா, ஹிந்து அறநிலையத் துறையினர் சமர்ப்பிக்கவில்லை என்பதால், நீதிமன்றம் மூலம் பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என்றும், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டும் முடிவு செய்யப்பட்டது.

கையெழுத்திட மறுப்பு

ஆனால் இந்த தீர்மானங்களை ஏற்க மறுப்பு தெரிவித்து திருப்பரங்குன்றம் தர்கா, பள்ளி வாசல் நிர்வாகத்தினர் தீர்மானத்தில் கையெழுத்திடாமல் சென்று விட்டனர்.

ஜன. 18 ல் ஹிந்து முன்னணி அமைப்பினர் 200 பேர், மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் தலைமையில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., கட்சியினருடன் திருப்பரங்குன்றத்தில் கூட்டம் நடத்தி, அனுமதி பெறாமல் கோவில் வந்து திரும்பியபோது, அவர்களுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கலெக்டரிடம் ஜன. 27 அன்று அனைத்து கட்சி நிர்வாகிகள், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த 11 பேர், தங்கள் கிராமத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், வெளிநபர்கள் யாரும் தங்கள் ஊர் நடைமுறையில் உள்ள வழிபாட்டு முறைகளில் தலையீடு செய்யாமல் இருக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டனர்.

அதனடிப்படையில் திருமங்கலம் ஆர்.டி.ஓ., தலைமையில் அமைதிக் கூட்டம் ஜன., 30ல் நடந்தது. இதில், பா.ஜ., தவிர அ.தி.மு.க, உட்பட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

'திருப்பரங்குன்றத்தில் இரு சமூகத்தினருக்கும் ஏற்கனவே உள்ள வழிபாட்டு நடைமுறை களை (தனிப்பட்ட முறையில் கந்துாரி கொடுப்பதை) தொடர்ந்து பின்பற்றவும், அதில் வெளிநபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் எனவும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தனர். அ.தி.மு.க., பிரதிநிதி மட்டும் அதில் கையெழுத்திட மறுத்து விட்டார்.

இச்சூழலில் பிப். 2 அன்று ஹிந்து முன்னணியினர் 'மலையைக் காப்போம், திருப்பரங்குன்றம் புனிதம் காப்போம்' என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரிய மனுவுக்கு போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் சமூகத்தை அழைத்து, மலையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு செய்திகளை பதிவேற்றி வந்தனர்.

16 கால் மண்டபம்

ஹிந்து முன்னணி உட்பட ஹிந்து அமைப்புகள் மாவட்டத்தின் பிறபகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி ஆகியவற்றில் இருந்தும் பல்வேறு கட்சி நபர்களையும் திரட்டி, திருப்பரங்குன்றம் கோவில் முன்புள்ள 16 கால் மண்டபம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யத் தயாராகினர்.

எனவே மதநல்லிணக்கத்தைப் பேணவும், அசாதாரண சூழலை தவிர்க்கவும் பொது அமைதியைப் பாதுகாக்க மதுரை நகர், மாவட்டம் முழுதும் வெளியூர் நபர்கள் யாரும் பிரவேசிக்காத வகையில், பிப். 3 காலை 6:00 மணி முதல் பிப். 4 இரவு 12:00 மணி வரை 2 நாட்களுக்கு மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

போராட்டம் நடத்த அனுமதி மறுத்ததை எதிர்த்து சில ஹிந்து அமைப்பினர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கின் உத்தரவில், பழங்காநத்தம் சந்திப்பில் பிப். 4, மாலை 5:00 முதல் மாலை 6:00 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. அதன்படி அப்பகுதியில் தேவையான பாதுகாப்பு அளித்து, 3,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கலைந்து சென்றனர்.

திருப்பரங்குன்றம் கிராம பகுதியைச் சேர்ந்த அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாகவும், மதநல்லிணக்கத்தைப் பேணும் வகையில் வசிக்கின்றனர். ஆனால் வெளியூரைச் சேர்ந்த இருதரப்பைச் சேர்ந்தவர்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயற்சிப்பதை கட்டுப்படுத்தவும், பொது அமைதி மற்றும் மதநல்லிணக்கத்தை பேணவும், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement