ராமேஸ்வரம் மீனவர் 19 பேருக்கு ரூ.1.88 கோடி அபராதம் விதிப்பு

ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதமும், 3 பேருக்கு தலா 60 லட்சம் என 19 பேருக்கும் 1.88 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜன.,25ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் 3 படகுகளில் இருந்த 34 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதில் இரு படகில் இருந்த 19 மீனவர்களை நேற்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

இதில் ஒரு படகின் உரிமையாளர் ரூபில்டன், டிரைவர் ஜான், மற்றொரு படகின் டிரைவர் டேனியல் ஆகியோருக்கு தலா ரூ.60 லட்சம் வீதம் ரூ.1.80 கோடி (இந்திய மதிப்பில் ரூ.52.20 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது. கட்டத் தவறினால் ஓராண்டு சிறை தண்டனை என அறிவிக்கப்பட்டது.

மீதமுள்ள 16 மீனவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 8 லட்சம் ( இந்திய மதிப்பில் ரூ.2.32 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது. இதனை கட்டத் தவறினால் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அபராதத்தை மத்திய, மாநில அரசுகள் செலுத்தி மீனவர்களை மீட்க வேண்டும் என அவர்கள் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Advertisement