ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட 7 நகரங்களுக்கு 'மாஸ்டர் பிளான்' பணிகளை துவக்கியது டி.டி.சி.பி.,

சென்னை:ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட ஏழு நகரங்களுக்கு, புதிதாக முழுமை திட்டம் தயாரிக்கும் பணிகளை, நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.

திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி போன்ற நகரங்கள், அதை ஒட்டிய சிறு நகரங்களுக்கு, முழுமை திட்டம் எனப்படும், 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கும் பணிகள், பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன.

நகர்ப்புற திட்டமிடல் சார்ந்த கல்வி நிறுவனங்கள் பங்கேற்புடன், புதிய முழுமை திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. முழுமை திட்டம் என்பது ஒரு நகரத்தில், அடுத்த, 20 ஆண்டுகளில் ஏற்படும் வளர்ச்சி கருதி, அதற்கு ஏற்ற வகையில் அடிப்படை வசதி மேம்பாட்டை திட்டமிடுவதாகும்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சேலம் மாவட்டம் ஏற்காடு ஆகியவை, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள். இதனால் ஏற்படும் முறையற்ற நகர்ப்புற வளர்ச்சியை கட்டுப்படுத்த, புதிய முழுமை திட்டங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வீட்டுவசதித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற நகரங்களில், கட்டட விதிமீறல்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. சீசன் காலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை கருத்தில் வைத்து, ஊட்டி, கூடலுார், நெல்லியாளம், கோத்தகிரி, கொடைக்கானல், வால்பாறை, ஏற்காடு ஆகிய நகரங்களுக்கு, புதிய முழுமை திட்டங்கள் தயாரிக்கும் பணிகளை, டி.டி.சி.பி., துவங்கியுள்ளது.

புவியியல் தகவல் அமைப்பு அடிப்படையில், புதிய முழுமை திட்டங்கள் தயாரிப்பதற்கான கலந்தாலோசனை நிறுவனங்களை தேர்வு செய்ய உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement