அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியை தர்ணா



அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியை தர்ணா


அரவக்குறிச்சி : பள்ளப்பட்டி, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர், பள்ளி முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால்
பரபரப்பு ஏற்பட்டது.கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியில் மருதா முஸ்லிம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி தாளாளராக முருகேசனும், தலைமை ஆசிரியராக அருள் முருகனும் உள்ளனர். பள்ளியில் ஆசிரியராக, 1990 முதல் பிரேமா என்பவர் பணியாற்றி வருகிறார். தலைமை ஆசிரியர் அருள் முருகன், தாளாளர் முருகேசன் ஆகியோர், பிரேமாவை
பள்ளியில் பாடம் எடுக்க வரக்கூடாது என கூறியுள்ளனர்.இந்நிலையில், நேற்று காலை பள்ளி வந்த ஆசிரியர் பிரேமாவை உள்ளே வரக்கூடாது என தாளாளர் கூறியதால், இதை கண்டித்து பள்ளி வளாகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம், வட்டார கல்வி அலுவலர்கள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து ஆசிரியர் பிரேமா கூறுகையில், ''ஆண்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு பங்களிப்பு வழங்குவதில்லை. மாணவர்களின் குறிப்பேடுகளில் அனைத்து ஆசிரியர்கள் புகைப்படம் உள்ளது. என்னுடைய புகைப்படம் இல்லை. 2005 முதல் தற்போது வரை, சக ஆசிரியர்கள் என்னுடன் பேசக்
கூடாது என, கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
இது குறித்து, பள்ளி தாளாளர் முருகேசன் கூறுகையில், 'ஆசிரியை பிரேமா சரியான தகவல் தெரிவிக்காமலேயே, அதிக விடுப்பு எடுத்து வருகிறார். வகுப்பறையில் மொபைல்போன் பயன்படுத்துகிறார். இது தொடர்பாக கேட்டதற்கு உரிய விளக்கம் தருவதில்லை,'' என்றார்.

Advertisement