கட்டளைப்பட்டி பாலத்தில் இல்லை தடுப்புச் சுவர்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848939.jpg?width=1000&height=625)
சிவகாசி : சிவகாசி கட்டளைப்பட்டி செல்லும் ரோட்டில்பெரியகுளம் கண்மாய் பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி இரட்டைப் பாலம் விளாம்பட்டி ரோட்டில் இருந்து கட்டளைப்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள பெரியகுளம் கண்மாயில் 100 மீட்டர் துாரத்திற்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் தடுப்புச் சுவர் இல்லை.
குறுகிய பாலம் என்பதால் சிறிது அசந்தாலும்பாலத்தில் செல்லும் வாகனங்கள் கண்மாய்க்குள் விழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. எதிரெதிரே வருகின்ற வாகனங்கள் விலகிச் செல்வதிலும் சிரமம் ஏற்படுகின்றது.
மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பிய போது வாகனங்கள் உள்ளே விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
பாலத்தின் இருபுறமும் தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் வருகின்ற வாகனங்கள் அச்சத்துடன் வர வேண்டி உள்ளது. நடந்து, சைக்கிளில் செல்பவர்களும் தடுமாறி விழ வாய்ப்புள்ளது.
எனவே பாலத்தில் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும், தெருவிளக்குகள் ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.