பைக்கில் ரூ.6.40 லட்சம் திருட்டு முதியவர்கள் இருவர் கைது

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் டூ - வீலர் பெட்டியை உடைத்து, 6.40 லட்சம் ரூபாயை திருடிய மதுரையைச் சேர்ந்த இரண்டு முதியவர்களை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் குளத்துார் லட்சுமணபுரத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி பொன்னுவேலு, 35. இவர், பிப்., 3ல், பழைய கரூர் ரோட்டில் உள்ள நிலத்தை ஒருவருக்கு விற்றார். அதன் மூலம், 6.40 லட்சம் ரூபாய் கிடைத்தது. அதை டூ - வீலர் பெட்டியில் வைத்திருந்தார்.

கரூர் ரோடு நந்தவனப்பட்டி அருகே உள்ள ஒரு ஹோட்டல் வாசலில் டூ - வீலரை நிறுத்தி விட்டு சாப்பாடு வாங்க சென்றார். சிறிது நேரத்திற்குப் பின் வந்த போது டூ - வீலரின் பெட்டி உடைக்கப்பட்டு, 6.40 லட்சம் ரூபாய் திருடு போயிருந்தது.

டி.எஸ்.பி., சிபின்சாய், எஸ்.ஐ., பிரபாகரன் மற்றும் போலீசார் ஹோட்டலில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வயதான இருவர் டூ - வீலர் பெட்டியை உடைத்து பணம் திருடியது தெரிந்தது.

போலீசார் விசாரித்து மதுரை சிக்கந்தர்சாவடியைச் சேர்ந்த சவுந்திரபாண்டியன், 65, தத்தனேரியைச் சேர்ந்த பாண்டியராஜன், 67, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 லட்சம் ரூபாய், 2 பவுன் நகைகளையும் மீட்டனர்.

இவர்கள் மீது மதுரை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement