பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக சோள தட்டையில் கவர், கப், பை

புதுச்சேரி: சாராய பாக்கெட்டிற்கு மாற்றாக எளிதில் மக்கக்கூடிய சோள தட்டையில் தயாரித்த பயோ டிகிரைடபள் பிளாஸ்டிக் கவர், கப், பையை சுற்றுச்சூழல் துறை இன்று அறிமுகம் செய்து வைக்கிறது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 110 சாராயக்கடை, 92 கள்ளுக்கடைகள் உள்ளன. புதுச்சேரி அரசு ஆரியப்பாளையம் சாராய வடிசாலையில் இருந்து சாராய கடைகளுக்கு சாராயம் வழங்கப்படுகிறது. கடைக்கு தேவையான மொத்த சாராயத்தில், 180 மி.லி., கண்ணாடி பாட்டிலில் 50 சதவீதமும், கேன்களில் 50 சதவீத சாராயம் வழங்கப்படுகிறது. சாராய கடை உரிமையாளர் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப பிளாஸ்டி கவரில் சாராயம் கட்டி கொடுப்பர். ஒரு நாளைக்கு மொத்தம் 25 ஆயிரம் லிட்டர் சாராயம் விற்பனையாகிறது.

புதுச்சேரியில் 50 மைக்ரான் அளவுக்கு குறைவான மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரிபேக், ஸ்ட்ரா, டீ கப், ஸ்பூன் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. சாராயம் குடித்து வீசும் பிளாஸ்டி கவர்கள் ஆறு மற்றும் குள கரைகளில் குவிந்து ஆடுமாடுகள் மேய்வதும், நீர் நிலைகளில் மிதப்பால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால் கடந்த ஆண்டு செப்., 15ம் தேதி சாராயம் பாக்கெட்டில் அடைத்து விற்க தடை விதித்தனர். சாராய கடை உரிமையாளர்கள் மாற்று ஏற்பாடு செய்துதர வலியுறுத்தினர்.

அதன்படி பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்றாக சோள தட்டை மூலம் தயாரித்த எளிதில் மக்கக் கூடிய கவர்கள் ( பயோ டிகிரைடபிள் பிளாஸ்டிக்) அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதில் சாராயம் ஊற்றினால் லீக் ஆகாது, உடையாது. மண்ணில் வீசினால் 4 நாட்களில் மக்கி விடும். கால்நடைகள் சாப்பிட்டாலும் பாதிப்பு வராது. இத்துடன், 3 கிலோ பொருட்களை தாங்கும் பை ஒன்றும், பிளாஸ்டி கப்பிற்கு மாற்றாக சோள தட்டையில் தயாரிக்கப்பட்ட கப் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் அறிமுக விழா, லாஸ்பேட்டை கோளரங்கில் இன்று நடக்க உள்ளது.

Advertisement