வைகை அணையில் பாசன நீர் திறப்பு நிறுத்தம்
ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர் முறைப்பாசன அடிப்படையில் நேற்று நிறுத்தப்பட்டது.
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் 2ம் போக பாசனத்திற்கு கால்வாய் வழியாக டிச.18 முதல் வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. முறைப்பாசனம் நடைமுறையில் இருப்பதால் அணையில் திறக்கப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
வைகை அணை நீர்வளத் துறையினர் கூறியதாவது: இங்கு நிறுத்தப்பட்ட நீர் ஐந்து நாட்களுக்குப் பின் மீண்டும் கால்வாய் வழியாக பாசனத்திற்கு திறந்து விடப்படும்.
விருதுநகர் மாவட்டம் கிருதுமால் நதி குடிநீர் தேவைக்காக நேற்று காலை 8:00 மணிக்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் ஆற்றின் வழியாக வைகை அணையில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நேற்று காலை அணை நீர்மட்டம் 64.90 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 71 அடி).நீர் வரத்து வினாடிக்கு 149 கன அடி. மதுரை, தேனி, ஆண்டிபட்டி -- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் செல்கிறது என்றனர்.