பர்கூர் பள்ளி மாணவி கூட்டு பலாத்கார விவகாரம் எச்.எம்., ஆசிரியர்களிடம் அதிகாரிகள் விசாரணை

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 8ம் வகுப்பு மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்ததாக, அதே பள்ளி ஆசிரியர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மற்ற ஆசிரியர்களிடம், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், போச்சம்பள்ளி அருகே கிராமத்தில் செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளியில், 75 மாணவியர் உட்பட, 140 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும், 13 வயது மாணவி கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு வரவில்லை. விசாரணையில், அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆறுமுகம், 48, சின்னசாமி, 57, பிரகாஷ், 37, ஆகியோர் கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், நேற்று முன்தினம் குற்றம் சாட்டப்பட்ட, 3 ஆசிரியர்களையும், பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். ஆசிரியர்களை கண்டித்து அப்பகுதியில் உள்ளோர், 2 இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்டனர். கைதான ஆசிரியர்கள் மூவரையும், 'சஸ்பெண்ட்' செய்து, சி.இ.ஓ., முனிராஜ் உத்தரவிட்டார். நேற்று அப்பள்ளிக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தது.

பள்ளி முன் ஆர்ப்பாட்டங்கள், கூட்டம் சேர்வதை தவிர்க்க, பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியை, 4 ஆசிரியைகள், 3 ஆசிரியர்கள் உட்பட, 8 பேர் பணிபுரிகின்றனர்.

இதில், 3 ஆசிரியர்கள் கைதான நிலையில், பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களிடம், அரசு துவக்கப்பள்ளி இணை இயக்குனர் சாந்தி மற்றும் கல்வி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பள்ளி திறந்தவுடன், அனைத்து மாணவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளி மாணவி பலாத்காரம் சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க., சார்பில் நாளை கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

ஆஜராக மாட்டோம்



கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் கோவிந்தராஜிலு தலைமையில் நேற்று நடந்தது. இதில், பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்தும், இந்த வழக்கில் கைதான, 3 ஆசிரியர்களுக்கு ஆதரவாக, நீதிமன்ற வழக்குகளில் ஜாமின் மனு மீது அல்லது வழக்குகளில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக போவதில்லை என, தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

மேலும், கைதான ஆசிரியர்கள் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில், நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு, அரசு உரிய நிவாரணம் வழங்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்க செயலாளர் சக்தி நாராயணன், துணைத்தலைவர்கள் குமாரசாமி, கலையரசி, இணை செயலாளர் சிவசக்தி குமரன், நுாலகர் பாரூக் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Advertisement