தி.மு.க.,வும் பா.ஜ.,வும் ஒன்று நடிகர் விஜய் ஆவேச தாக்கு

6

சென்னை: 'தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சில திட்டங்களை, மற்ற மாநில அரசுகள் பின்பற்றுகின்றன என்று பெருமை பேசும் ஆட்சியாளர்கள், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆய்வை நடத்தி முடித்த மற்ற மாநிலங்களை பின்பற்ற தயங்குவது ஏன்' என, த.வெ.க., தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:

நாடு முழுதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில், மாநில அரசுகளும் தங்களது மாநிலத்தில், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆய்வை நடத்த, அரசியலமைப்பு சட்டத்தில் வழியிருக்கிறது.

எனவேதான், பீஹார் மாநில அரசும், கர்நாடக மாநில அரசும், ஏற்கனவே ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்து, புள்ளிவிபரங்களை கையில் வைத்துள்ளன. தெலுங்கானா மாநில அரசும், 50 நாட்களில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வை முடித்துள்ளது. அது மட்டுமின்றி, அந்த ஆய்வு அறிக்கை மீது, சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்கவும் துவங்கியுள்ளது.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சில திட்டங்களை, மற்ற மாநில அரசுகள் பின்பற்றுகின்றன என்று, தமிழக ஆட்சியாளர்கள் பெருமை பேசுகின்றனர். ஆனால், சமூக நீதிக்கு அடித்தளம் அமைக்கும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்த, மற்ற மாநிலங்களை பின்பற்ற தயங்குவது ஏன் என்ற கேள்விக்கு, இதுவரை விடையில்லை.

தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்கள், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வை கூட நடத்தாமல், மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.

சுயலாபத்திற்காக மட்டுமே, ஈ.வெ.ரா.,வை பற்றி பெருமை பேசும் தற்போதைய ஆட்சியாளர்கள், சமூக நீதியை காக்கும் செயல்பாடான ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்ற வாதத்தையே முன்வைத்து வருகின்றனர்.

மக்கள்தொகை கணக்கெடுப்பைதான் மத்திய அரசு நடத்த வேண்டும். அதற்கு முன்னோட்டமாக, ஜாதிவாரி ஆய்வை மாநில அரசே நடத்தலாம். அதற்கும் தங்களிடம் அதிகாரம் இல்லை என்று, தற்போதைய ஆட்சியாளர்கள் சொல்ல போகின்றனரா?

அப்படியெனில், தெலுங்கானா மாநில அரசுக்கு மட்டும், அது சாத்தியமானது எப்படி?

அங்கு சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டி, ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு அறிக்கையை சமர்பித்து விவாதம் நடத்துவது எப்படி; மற்ற மாநிலங்களை போல ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வை கூட, தமிழகத்தில் நடத்தவில்லையே ஏன்?

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றனர் என்பதை, மக்கள் நன்கு அறிவர். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

Advertisement