'தமிழகத்தில் மாற்றத்துக்கான சம்ஹாரம் துவங்கியது'

கோவை; ''தமிழகத்தில் ஏற்படப்போகும் மாற்றத்துக்கான சம்ஹாரம் முருகப்பெருமானின் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றத்திலிருந்து துவங்கியுள்ளது,'' என்று பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் முதலாவது படைவீடாக போற்றப்படுகிறது. அங்கு இந்துக்களும், முஸ்லிம்களும் உறவினர்கள் போல வாழ்ந்து வருகின்றனர் என்று கூறியிருக்கிறார், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.

நாங்களும் அதையே தான் கூறுகிறோம். உறவினர் போல இந்துக்களும் முஸ்லிம்களும் பழகி வரும் பொழுது, சிறுபான்மையினருக்கு ஆபத்து என்ற பொய் பிரசாரத்தை பேசி, இந்துக்களின் மனது புண்படும் அளவுக்கு ஒரு பிரிவினரை துாண்டிவிடும் வேலையை செய்து கொண்டிருக்கிறார் எம்.பி., கனிமொழி.

கோர்ட் அறிவுறுத்தலின் படி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறும் அமைச்சர், நீதிமன்றம் அறிவுறுத்துவதற்கு முன்பே, அங்கு பிரியாணி சாப்பிட போன எம்.பி.,யை ஏன் தடுக்கவில்லை.

தமிழகத்தில் தி.மு.க., நடத்தும் பிளவுவாத அரசியலுக்கான சம்ஹாரம், திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் முதல்படைவீடான புண்ணிய பூமியிலிருந்து துவங்கியுள்ளது. இது, இந்துக்களுக்கு நன்மையை ஏற்படுத்துவோடு நம் ஒற்றுமையை பலப்படுத்தும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement