சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவித் திட்டம்: தமிழகத்தில் எத்தனை பயனாளிகள்?
புதுடில்லி: பிரதமரின் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தில், தமிழகத்தில் 3.99 லட்சம் பேருக்கு கடன் வழங்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.
பிரதமரின் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ், அரசு ஒதுக்கிய நிதியின் விவரங்கள், பயனாளிகள் விவரங்கள், தமிழகத்தில் மாவட்ட வாரியாக எவ்வளவு என்பவை குறித்து தி.மு.க., எம்.பி., கனிமொழி லோக்சபாவில் கேள்வி எழுப்பி இருந்தார்
இதற்கு மத்திய இணை அமைச்சர் தோகன் சாகு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: இத்திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு எந்த நிதியும் வெளியிடப்படுவதில்லை. கடன் தொகை வங்கிகளால் நேரடியாக பயனாளிகளின் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. ஜன., 30, 2025 நிலவரப்படி, பிரதமரின் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 68.02 லட்சம். இவர்களில் தமிழகத்தில் 3.99 லட்சம் பயனாளிகள் உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1,00,429 பேர் கடன் பெற்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 8966 பேர் பயன் பெற்றுள்ளனர்.
ஜன., 30 நிலவரப்படி, தமிழகத்தில், சுமார் 2.28 லட்சம் பயனாளிகள் முதல் தவணை கடனை திருப்பிச் செலுத்தியுள்ளனர். அவர்களில் 1.37 லட்சம் பயனாளிகள் 2வது தவணை கடனைப் பெற்றுள்ளனர். மேலும், 45,363 பயனாளிகள் 2வது தவணை கடனை திருப்பிச் செலுத்தியுள்ளனர். இவர்களில் 26,955 பயனாளிகள் 3வது தவணை கடனைப் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.