ஓய்வு பேராசிரியையின் ரூ.10 லட்சம் திருட்டு
கே.கே.நகர், அசோக் நகர் 19வது அவென்யூவைச் சேர்ந்தவர் கலாவதி, 74; ஓய்வு பெற்ற கல்லுாரி பேராசிரியை. இவரது கணவர் மணி, 80.
வயது முதிர்வு காரணமாக பெற்றோரை கவனிக்க, அமெரிக்காவில் பணிபுரியும் அவர்களது மகன், திருவள்ளூரைச் சேர்ந்த கல்லுாரி மாணவியை ஏற்பாடு செய்தார். அவர், சென்னையில் படிப்பதால், இவர்களது வீட்டிலே தங்கி கல்லுாரிக்கு சென்று வந்தார்.
இரு வாரங்களுக்கு முன், மணி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மகன் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தார்.
அப்போது, தந்தையின் மொபைல் போனை பார்த்தபோது, வங்கியின் குறுஞ்செய்திகள் அழிக்கப்பட்டிருந்தன. சந்தேகமடைந்த செந்தில் குமார், வங்கிக்கு சென்று தந்தையின் கணக்கு வழக்குகளை சரிபார்த்துள்ளார். இதில், 10 லட்சம் ரூபாய் வரை எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், வெளியே சென்று வர முடியாத முதியவர் மணி, நான்கு மாதங்களுக்கு முன், தன்னுடைய ஏ.டி.எம்., கார்டு மற்றும் அதன் ரகசிய எண்ணை, மாணவியிடம் தெரிவித்து, பணம் எடுத்து வர அனுப்பியுள்ளார்.
அதன்பின், முதிய தம்பதி துாங்கும் நேரத்தில், ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, பணத்தை எடுத்து விட்டு, குறுஞ்செய்திகளை அழித்ததாக கூறப்படுகிறது. போலீசார் விசாரிக்கின்றனர்.