கோவை வேளாண் பல்கலையில் 19 புதிய பயிர் ரகங்கள் வெளியீடு
கோவை:கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், 19 புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வேளாண் பல்கலையின் கீழ் 18 கல்லூரிகள், 42 ஆராய்ச்சி நிலையங்கள் 15 வேளாண் அறிவியல் நிலையங்கள், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகள், தட்பவெப்பநிலைக்கேற்ப புதிய பயிர் ரகங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை, 929 ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நேற்று, மேலும் 19 புதிய ரகங்களை வெளியிட்டு, துணைவேந்தர் கீதாலட்சுமி பேசியதாவது: வேளாண் பயிர்களில், நெல்லில் பி.பி.டி., ரகத்தை விட, 15 சதவீதம் கூடுதல் மகசூல் தரும் கோ 59 ரகம் அறிமுகம் செய்யப்படுகிறது. இது, எக்டேருக்கு 5900 முதல் 6500 கிலோ வரை மகசூல் தரும் சன்ன ரகம். ஏ.டி.டீ., 56; ஏ.டி.டீ., 60 ஆகிய நெல் ரகங்களும் அறிமுகம் செய்யப்படுகின்றன.
மானாவாரி, இறவை என இரு வகைகளிலும், பயிர் செய்யும் கோஎச்(எம்) 12 மக்காச்சோளம். இது மானாவாரியில் ஹெக்டருக்கு 6500 கிலோவும், மானாவாரியில் 8200 கிலோவும் மகசூல் தரும்.
வம்பன் 12 உளுந்து; சி.டி.டீ 1நிலக்கடலை; வீரிய ஒட்டு ஆமணக்கு ஒய்ஆர்சிஎச் 3; கோ 4 தக்காளி; வீரிய ஒட்டுரக வெண்டை கோ(ஹெச்) 5; அதீத காரத்தன்மை கொண்ட கோ 5 மிளகாய்; சாம்பல் பூசணி பி.எல்.ஆர்., 1; குட்டை ரகமான காவேரி வாமன் வாழை; அவகோடா டிகேடி 2; ஏற்றுமதிக்கு உகந்த எஸ்.என்கே.எல்., 1 எலுமிச்சை,; தோவாளை 1 அரளி; வெள்ளை ஈக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டஏ.எல்.ஆர்.,4 தென்னை; பி.பி.ஐ.,1 ஜாதிக்காய், சர்க்கரை நோய் மூலிகைச் செடி சிறுகுறிஞ்சான் கோ 1; கேகேஎம்1 சிப்பிக் காளான் ஆகிய 19 ரகங்களை வெளியிடுகிறோம். இவை அதிக மகசூல் தருவதோடு, அனைத்துப் பருவநிலைகளையும் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டவை. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.