கனியாமூர் பள்ளி கலவர வழக்கு விசாரணை 41,250 பக்க இறுதி அறிக்கை கோர்ட்டில் தாக்கல்

கள்ளக்குறிச்சி : கனியாமூர் கலவரம் தொடர்பான வழக்கில், 41 ஆயிரத்து 250 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமாக இறந்தார். அதைத் தொடர்ந்து, ஜூலை 17ல் நடந்த போராட்டம், கலவரமாக மாறியது. கலவரம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், பள்ளி வளாகத்தில் பொருட்களை சூறையாடி திருடியது, போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்தது, பசு மாடுகளை துன்புறுத்தியது, சின்ன சேலத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் உட்பட போலீசாரை கல்வீசி தாக்கியது என மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சென்னை சிறப்பு புலனாய்வுக் குழு எஸ்.பி., பிரவீன்குமார் அபினவ் தலைமையில் டி.எஸ்.பி.,க்கள் அம்மாதுரை, ரவிச்சந்திரன், அண்ணாதுரை ஆகியோர் கொண்ட சிறப்பு புனாய்வுக் குழு போலீசார் விசாரித்தனர்.

பள்ளி கலவரம் தொடர்பாக பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, தாய்மாமன் செந்தில்முருகுன் மற்றும் 53 சிறார்கள் உட்பட 916 பேர் மீது வழக்குப் பதிந்து, 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

தொடர்ந்து இவ்வழக்கின் குற்றப்பத்திரிகை இறுதி அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுநீதிமன்றம் மற்றும் விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்தனர்.

அதில், பள்ளி வளாக கலவர வழக்கில் 666 பேர் மீதான விசாரணைக்கு 21 ஆயிரம் பக்கங்கள். போலீஸ் வாகனத்தை தீ வைத்து கொளுத்திய வழக்கில் 124 பேர் மீது விசாரணைக்கு 10 ஆயிரம் பக்கங்கள்.

பசுமாடுகளை துன்புறுத்திய வழக்கில் 5 பேர் மீதான விசாரணைக்கு 150 பக்கங்கள். சின்னசேலத்தில் காவல் துறை அதிகாரிகளை கல்வீசி தாக்கிய வழக்கில் 121 பேர் மீது 9,000 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

53 சிறார்கள் மீதான வழக்கில், விழுப்புரம் கோர்ட்டில் 1,100 பக்கத்திற்கு இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கனியாமூர் கலவரம் தொடர்பாக 4 வழக்குகளில், 53 சிறார்கள் உட்பட மொத்தம் 916 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு 41 ஆயிரத்து 250 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கலவர வழக்கில்

51 சிறார்கள் ஆஜர்கனியாமூர் கலவர வழக்கில் தொடர்புடைய 51 சிறார்கள் மீதான வழக்கில், குற்றப் பத்திரிகை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணை விழுப்புரம் சிறார் நீதிமன்றதில் நேற்று நடந்தது. நீதிபதி ராதிகா முன்னிலையில் 51 சிறுவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவர் ஆஜராகவில்லை.தொடர்ந்து, வழக்கின் விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.பள்ளி நிர்வாகி சாந்தியிடம், இறுதி அறிக்கையின் நகல் வழங்கப்பட்டது.

Advertisement