திறக்கப்படாமல் வீணாகும் நகராட்சி அமைத்த பூங்கா

உடுமலை : உடுமலையில், ரூ.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அன்ன பூரணி நகர் பூங்கா பயன்பாடின்றி வீணாகி வருகிறது.

உடுமலை நகராட்சி அன்னபூரணி நகரில், பூங்கா ஒதுக்கீட்டு இடத்தில், ரூ.25 லட்சம் மதிப்பில், பூங்கா அமைக்கப்பட்டது.

சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடை பாதை என பல்வேறு பணிகள் நடந்த நிலையில், ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவழிக்காமல், முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாததால், செடிகள், முட்செடிகள் என புதர் மண்டியும், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிகளவு காணப்படுகிறது.

இதனால், அருகிலுள்ள பொதுமக்களும் பாதித்து வருகின்றனர். பூங்காவை முழுமையாக புதுப்பிக்கவும், மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடவும், பராமரிக்கவும் வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement