மரலோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து; இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரி கோத்தகிரி அருகே மரம் லோடு ஏற்றி வந்த லாரி, பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோத்தகிரி அருகே, தும்மனட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, கம்பட்டி பகுதியில், கற்பூர மரம் அறுக்கப்பட்டு வருகிறது. வெட்டிய மரங்கள், லாரிகள் மூலம், சமவெளி பகுதிகளுக்கு விற்பனை கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கனரக லாரியில் லோடு ஏற்றப்பட்டு, கட்டபெட்டு வழியாக, மேட்டுப்பாளையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மெதுவாக இயக்கப்பட்டு லாரி, 'ஓவர் லோடு' காரணமாக, கட்டபெட்டு - பில்லிக்கம்பை இடையே, குடிமனை கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டது. நேற்று லாரியில் இருந்த மரங்கள் இறக்கப்பட்டு, 'கிரேன்' உதவியுடன் லாரியை மீட்கும் பணி நடந்தது.

இதனால், கட்டபெட்டு - கக்குச்சி மற்றும் தும்மனட்டி வழித்தடத்தில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 2:30 மணிக்கு லாரி மீட்கப்பட்டதை அடுத்து, போக்குவரத்து சீரானது.

Advertisement