தண்டவாளத்தில் கருங்கற்கள்; ரயில்களை கவிழ்க்க சதியா?

சென்னை : சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, திருவொற்றியூர் வழியாக கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு, மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

டில்லி, உத்தரபிரதேசம், தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களும், இவ்வழியாக இயக்கப்படும்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, ரயில்வே தண்டவாளங்களை சரிபார்க்கும் லைன்மேன் விகாஷ்குமார், 25, என்பவர், திருவொற்றியூர் ரயில் நிலையம் - அண்ணாமலை கேட் இடையேயான பகுதியில், தண்டவாளத்தை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது, பிரதான தண்டவாளத்தில் இருந்து, ரயிலை லுாப் லைனுக்கு மாற்றும் தண்டவாளத்திற்கு இடையே, ராட்சத கான்கிரீட் கல், கருங்கற்கள் மற்றும் ஸ்பேனர் இருப்பதை கண்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவை அப்புறப்படுத்தப்பட்டன.

இது குறித்து, ரயில்வே டி.எஸ்.பி., கர்ணன், ஆய்வாளர் சசிகலா அடங்கிய தனிப்படை ரயில்வே போலீசார், சம்பவம் நடந்த பகுதியை சுற்றியுள்ள இடங்களில், தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சிறுவர்கள் விளையாட்டிற்காக தண்டவாளத்தில் கற்களை வைத்தனரா? அல்லது சதி வேலையா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

Advertisement