சுகாதார நாப்கின் விவகாரம்: கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதில்

5

சென்னை : 'சுகாதார நாப்கின்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?' என, தி.மு.க.,- எம்.பி., கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, 'பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது' என, மத்திய இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் பதில் அளித்துள்ளார்.

பார்லிமென்ட் தி.மு.க., குழுத் தலைவர் கனிமொழி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரிடம் எழுத்துப்பூர்வமாக, சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் அளித்துள்ள பதில்:

நாட்டில் உள்ள 10 முதல் 19 வயதுக்கு உட்பட்ட, இளம் பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், சுகாதார நாப்கின்கள் பயன்படுத்துவதை அதிகரிக்கவும், சுற்றுச்சூழல் ரீதியாக நாப்கின்களை பாதுகாப்பாக பயன்படுத்தவும், மத்திய அரசு மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துகிறது.

இளம் பருவப் பெண்களை உள்ளடக்கிய, இந்த திட்டம் நாடு முழுதும் செயல்படுத்தப்படுகிறது. தேசிய சுகாதார திட்டத்தால், மாநில திட்ட அமலாக்கம் வாயிலாக, இத்திட்டத்திற்கு உதவி செய்யப்படுகிறது. பாதுகாப்பான மாதவிடாய் சுகாதார நடைமுறைகளை பராமரிக்க, பொருத்தமான தர நிலைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய, மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement