மலர், காய், கனி கண்காட்சி நிறைவு

புதுச்சேரி : புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் நடந்த 35வது மலர், காய் மற்றும் கனி கண்காட்சி நிறைவு விழாவில், முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், வேளாண் விழா-2025 மற்றும் 35வது மலர், காய் மற்றும் கனி கண்காட்சி, கடந்த 7ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடந்தது. நேற்று மாலை நிறைவு விழா தாவரவியல் பூங்காவில் நடந்தது.

கண்காட்சியை முன்னிட்டு தொட்டி வளர்ப்பு, கொய் மலர்கள், காய்கறிகள், கனிகள், அலங்கார செடிகள், தோட்டங்கள், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் மற்றும் தானிய ரகங்கள் என 9 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பரிசு வழங்கினார்.

விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வாழ்த்தி பேசினர். துறை இயக்குனர் வசந்தகுமார் வரவேற்றார்.

போட்டிகளில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் பிரிவில் 526 பேர் கலந்து கொண்டனர்.

இதில், 74 பேருக்கு முதல் பரிசும், 97 பேருக்கு 2ம் பரிசும், 11 பேருக்கு சிறப்பு பரிசு, 21 பேருக்கு ஆறுதல் பரிசு என மொதத்ம் 203 பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், 'மலர் ராஜா' பட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த கணேசனும், 'மலர் ராணி' பட்டம் புதுச்சேரியை சேர்ந்த ஜெயஸ்ரீ பிரியதர்ஷினியும் பெற்றனர். இதே போல், 'காய், கனி ராஜா' பட்டம் பூரணங்குப்பத்தை சேர்ந்த கலியமூர்த்திக்கும், 'காய், கனி ராணி' பட்டம் செந்தாமரைக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த ரோஜா தோட்டத்திற்கான 'மனோரஞ்சன் கங்குலி சுழற்கோப்பை' மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும், தனி நபர் ரோஜா தொட்டி வளர்ப்பிற்கான 'சரோஜா திருநாவுக்கரசு ஆனந்தா இன் சுழற்கோப்பை' கணேசனுக்கும், அதிக பரிசுகள் பெறும் நிறுவனத்திற்கான 'வெங்கடசுப்பா ரெட்டியார் சுழற்கோப்பை' புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கும் வழங்கப்பட்டன.

தோட்டக்கலை பிரிவின் இணை இயக்குனர் சண்முகவேலு நன்றி கூறினார்.

விழாவில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கூடுதல் வேளாண் இயக்குனர்கள் ஜாகீர் உசேன், காரைக்கால் வேளாண் கல்லுாரி முதல்வர் புஷ்பராஜ், புதுச்சேரி வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் விஜயகுமார், காரைக்கால் அறிவியல் நிலைய முதல்வர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement