ஆர்கானிக் முறையில் பயிர் சாகுபடி முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தல் 

புதுச்சேரி : பூச்சி கொல்லி மருந்து இல்லாமல், ஆர்கானிக் முறையில் பசுமை உரங்களை பயன்படுத்தி, விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என, முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தினார்.

புதுச்சேரி மலர் கண்காட்சி நிறைவு விழாவில் அவர் பேசியது:

வேளாண் விழா மற்றும் மலர், காய், கனி கண்காட்சி மூலமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மக்கள் வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து, கீரை, காய்கறி வகைகளை பயிரிட்டு பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாடியில் தோட்டங்கள் அமைப்பதற்கு, மானியம் மற்றும் ஆலோசனைகளை வேளாண் துறை வழங்குகிறது. புதுச்சேரியில், 32 ஆயிரம் ஹெக்டர் விவசாய நிலங்கள் இருந்த நிலையில் தற்போது, 11 ஆயிரம் ஹெக்டர்தான் உள்ளது. அதில், எந்த அளவிற்கு, வேளாண் உற்பத்தியை பெருக்க முடியும் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

பூச்சி கொல்லி மருந்து இல்லாமல், ஆர்கானிக் முறையில் பசுமை உரங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்வதற்கான நிலையை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கான ஆலோசனைகளை வேளாண் துறை வழங்குகிறது.

விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களை சரியான நேரங்களில் அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாய கடன்களுக்கான அசல் மற்றும் வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஹெக்டருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் வேளாண் உற்பத்தியை பெருக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Advertisement