தைப்பூசம், முகூர்த்த சீசன் எதிரொலி; உழவர் சந்தையில் 50 டன் காய்கறி விற்பனை

நாமக்கல்: தைப்பூச விழா மற்றும் முகூர்த்த சீசனை முன்னிட்டு, நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 50 டன் காய்கறிகள், 21 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

நாமக்கல் கோட்டை சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும் காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.

தற்போது, தைப்பூச விழா நடப்பதால், அசைவ பிரியர்கள் பலர் சைவத்திற்கு மாறி உள்ளனர். மேலும், தை மாத முகூர்த்த சீசன் துவங்கியுள்ளது. இதனால் நேற்று, வழக்கத்தை விட விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 204 விவசாயிகள், காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதன்படி, 42,610 கிலோ காய்கறி, 7,515 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள் என மொத்தம், 50,145 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அவற்றை, 10,029 பேர் வாங்கிச்சென்றனர். இதன் மூலம், 21 லட்சத்து, 460 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement