பெங்களூரில் ஓடும் வாகனங்கள் 10 ஆண்டில் 50 லட்சம் அதிகரிப்பு

பெங்களூரு, : பெங்களூரில் கடந்த 10 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை 50 லட்சம் அதிகரித்து உள்ளதே, போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.

கர்நாடகாவில், போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் பொது போக்குவரத்தான பஸ்கள், ரயில்கள் முக்கிய பங்கு வகுக்கின்றன. ஆனால், பெரும்பாலான மக்கள், பொது போக்குவரத்தில் பயணிப்பதில்லை. அவர்கள் பைக்குகள், கார்களில் பயணிக்கின்றனர்.

பைக்குகள், கார்களை தவணை முறையில் எளிமையாக வாங்கலாம் என்பதால் பலரும் வாங்கி விட்டனர். இதனால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளன. போக்குவரத்து நெரிசலும் அதிகமாகி வருகிறது. போக்குவரத்து நெரிசலை பற்றி கவலைப்படும் பலர், பொது போக்குவரத்தை பயன்படுத்த தவறுகின்றனர்.

இது தொடர்பாக, போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரில் 2014 - 2015 ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 65.75 லட்சம் ஆக இருந்தது. படிப்படியாக அதிகரித்து, தற்போது, பெங்களூரில் 1.21 கோடி பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 6,000 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

சராசரியாக மாநிலத்தின் பிற பகுதிகளில், மூன்று குடும்பங்களுக்கு ஒரு வீட்டில் வாகனம் வைத்து உள்ளனர். ஆனால், பெங்களூரில் வசிக்கும் ஒவ்வொருவரும் ஒரு வாகனம் வைத்து உள்ளனர். பெங்களூரில் கடந்த 10 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை 50 லட்சம் அதிகரித்து உள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

நகரில் மக்கள் தொகை எண்ணிக்கையான 1.43 கோடியை, வாகனங்களின் எண்ணிக்கை நெருங்கி வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள், வாகனங்கள் எண்ணிக்கை மக்கள் தொகையை தாண்டி விடலாம்.

பொது மக்கள் கார், பைக் வைத்திருப்பது கட்டாயம் என்ற மனநிலையில் இருப்பதால், அதன் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்பதே நிதர்சனம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement