சுருளி அருவிக்கு யானைகள் வருவதை தடுக்க ஏ.ஐ. தொழில்நுட்பம் தேவை

கம்பம் : சுருளி அருவி, மலையடிவார பகுதிகளுக்கு யானைகள் அடிக்கடி வருவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,)தொழில்நுட்பத்தை பயன்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சுருளி அருவிக்கு அடிக்கடி யானைகள் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்து வருகிறது.

இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.

வனத்துறைக்கு நுழைவு கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் பாதிக்கப்படுகிறது.

மேலும் வண்ணாத்திபாறை பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி வெட்டு காடு பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. கடந்த வாரம் வெட்டுக் காடு பகுதியில் யானைகள் பயிர்களை சேதப்படுத்தியது. அதே போன்று கோம்பை, பண்ணைப் புரம், தேவாரம் மலையடிவாரங்களிலும் யானைகளின் தொந்தரவு உள்ளது. எனவே யானைகள் சுருளி அருவி மற்றும் மலையடிவாரங்களுக்கு வருவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில் நுட்பத்தை பயன்படுத்த வனத்துறை முன்வர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யானைகள் வரும் பாதையில் கேமராக்கள் பொருத்தியும், ஒலிபெருக்கியுடன் இணைத்து விடுவார்கள். யானைகள் 50 மீட்டர் சுற்றளவிற்குள் வந்தால், கேமரா பதிவுகள் கம்ப்யூட்டர் மானிட்டருக்கு தகவல் சென்று விடும் . அதிலிருந்த ஒலிபெருக்கியில் யானையை விரட்ட ஏழு விதமான ஒலிகள் எழுப்பப்படும். இதை கேட்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடும். இதன் மூலம் யானை வருவது தடுக்கப்படும், மேலும் முன்கூட்டியே தெரிந்து விடும்.

கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கெம்மாரம்பாளையம் மற்றும் , இருளர் பதி பழங்குடியினர் கிராமங்களில் யானைகள் தொந்தரவை தடுக்க இந்த வகையான ஏ. ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதே தொழில்நுட்பத்தை தேனி மாவட்டத்தில் பயன்படுத்த மேகமலை புலிகள் காப்பக அதிகாரிகளும், தேனி மேற்கு வனத்துறையினரும் முன்வர விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement