ரூ.93 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடி; அரசு நிதி வீண்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் உழவர் சந்தைக்கு அருகில் ரூ.93 லட்சத்தில் நவீன மீன் அங்காடி மையம் அமைக்கப்பட்டு 202௧ல் அ.தி.மு.க., ஆட்சியில் திறப்பு விழா நடந்த சில நாட்களில் மூடப்பட்டது.

அதன் பின் தற்போது வரை பூட்டியே கிடப்பதால் பராமரிப்பின்றி கட்டடத்தின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் அரசு நிதி வீணாடிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.ராமநாதபுரத்தில் சாலைத்தெரு, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மீன் மார்க்கெட் செயல்படுகிறது. கீழக்கரை, ஏர்வாடி, ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், வாலிநோக்கம், முந்தல், தொண்டி ஆகிய இடங்களில் இருந்து மீன்கள் ராமநாதபுரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகிறது.

சாலைத்தெருவில் உள்ள மீன் மார்க்கெட் அருகில் காய்கறி மார்க்கெட் செயல்படுவதால் தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். வாகனங்களை மார்க்கெட்டிற்கு வெளியை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உழவர்சந்தை அருகே நவீன முறையில் ரூ.93 லட்சத்தில் புதிய மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. 54 கடைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர் வசதி, மீன்களை பாதுகாக்க குளிர்சாதன அறை, குறைந்த வாடகை என நவீன முறையில் இந்த மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன மீன் அங்காடி 2021ல் அ.தி.மு.க., ஆட்சியில் திறக்கப்பட்டது. இருப்பினும் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரிகள் வராத நிலையில் ஒப்பந்ததாரர் நஷ்டம் ஏற்படுவதாக கூறியதால் மூன்றாண்டுகளாக பூட்டியே கிடக்கிறது.

தற்போது நவீன மீன்மார்க்கெட் பகுதியில் புதர் மண்டியுள்ளது. நவீன மீன் அங்காடியின் குளிர்சாதன அறை பெட்டிகள் பழுதாகி அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே 2025ம் ஆண்டிலாவது நவீன மீன் மார்க்கெட்டை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement