தடையை மீறி விற்பனை செய்த இறைச்சி கடைக்கு அபராதம்

ராமநாதபுரம்: வள்ளலார் நினைவு தினத்தில் ராமநாதபுரத்தில் தடையை மீறி இறைச்சி விற்ற கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். 12 கிலோ இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் இறைச்சி மற்றும் மதுபானங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களிலும் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நகராட்சி சுகாதாரத் துறை நகர் நல அலுவலர் ரத்தினக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் நல்லுசாமி, ஸ்ரீதேஸ்குமார் ஆகியோர் சின்னக்கடை வீதி, அரண்மனை ரோடு, தங்கப்பாநகர், ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது 4 கடைகளில் தடையை மீறி கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து 12 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. கடைகளுக்கு ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement