நெல் கொள்முதல் செய்து 20 நாளாகியும் பணம் வழங்காததால் விவசாயிகள் விரக்தி

சேத்துார்: சேத்துார் அருகே செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை நெல்லை கொண்டு வந்து சேர்க்க இடம் இல்லாததுடன் நெல் கொள்முதல் செய்து 20 நாட்களாகியும் பணம் கிடைக்காததால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.

சேத்துார் சுற்று வட்டார பகுதியில் வாழவந்தான் கண்மாய், நச்சாடைப்பேரி உள்ளிட்ட கண்மாய் நீர் பாசனத்தை நம்பி நுாற்றுக்கணக்கான ஏக்கர் நெல் விவசாயம் நடந்து வருகிறது.

விளைந்த நெல்லை பணமாக மாற்ற வியாபாரிகளிடம் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். வியாபாரிகள் வாங்கும் நெல்லை போட்டிகள் இடையே தேவைக்கு ஏற்ப விலை வைத்து வாங்குவதுடன் அதற்கான தொகையை வழங்குவதில் தாமதம் செய்வதும் , ஏமாற்றுவது என்ற நிலை இருந்து வந்தது.

இதை மாற்றும் விதமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து வியாபாரிகளிடம் வாங்கியது.

ராஜபாளையம் தாலுகா சேத்துார் மாரியம்மன் கோயில் அருகிலும், மலையடிவாரம் செல்லும் பாதை இரண்டு இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொள்முதல் நிலையங்களில் விற்ற நெல்லுக்கான தொகையை விவசாயிகள் கணக்கில் 20 நாட்களாக வரவு வைக்காமல் வைத்துள்ளனர்.

அத்துடன் உலர் களங்களில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மூடைகளை அடுக்கி வைத்துள்ளதால் மீதம் உள்ள நெற்பயிரை கொண்டு வந்து சேர்க்க இடம் இன்றி அறுவடை செய்யாமல் வைத்துள்ளனர். அடுத்த கட்ட சாகுபடி பணிகளை தொடங்க உள்ள நிலையில் செலவினங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு வழியின்றி சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே நிலுவையில் உள்ள கொள்முதலுக்கான பணத்தை விவசாயிகள் கணக்கில் வழங்குவதுடன், தேங்கியுள்ள மூடைகளை கொண்டு செல்ல வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement