செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கூட்டறிக்கை; 58 நாடுகள் கையெழுத்து

1

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த சர்வதேச உச்சி மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு தொடர்பான கூட்டு அறிக்கையில், 58 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.



ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சி மாநாடு, ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்றது. பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், இந்திய பிரதமர் மோடி இணை தலைமை வகித்து மாநாட்டை நடத்தினர். இதில், பல நாட்டுத் தலைவர்கள், தொழில்நுட்பத் துறை நிறுவனங்களின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு தொடர்பான கூட்டு அறிக்கையில், 58 நாடுகள் உள்ளிட்ட 60 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.


கையெழுத்திட்ட நாடுகளில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சீனா, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, போலந்து, சிங்கப்பூர், தென் ஆப்ரிக்கா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உக்ரைன் ஆகியவை அடங்கும்.


'பூமிக்கும், அதன் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் செயற்கை நுண்ணறிவு' என்ற தலைப்பிலான கூட்டறிக்கை, பங்கேற்ற அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளாலும் ஏற்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அனைவருக்கும் நம்பிக்கையும், பாதுகாப்பும் இருக்க வேண்டும், அனைவருக்கும் அணுகுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், பொது நலன் கருதும் ஏ.ஐ., தளம் உருவாக்கப்பட்டுள்ளது.


கூட்டறிக்கையில், மாநாட்டின் நிறுவன உறுப்பினர்களான நாடுகள் இணைந்து, பொது நலன் கருதி பிரத்யேக ஏ.ஐ., தளம் ஒன்றை நிறுவியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தளம், தனியார் மற்றும் அரசுகள் சார்பில் மேற்கொள்ளப்படும் ஏ.ஐ., முன்னெடுப்புகளுக்கு இடையிலான இடைவெளியை இணைப்பதற்கு உதவியாக இருக்கும்.


வேலைச்சந்தையில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்த அறிவை, அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். இதற்கென தொடர் கண்காணிப்பகங்களை ஏற்படுத்த வேண்டும். திறன் மேம்படுத்தவும், தரமான வேலைச்சூழல் ஏற்படுத்தவும் இவை அவசியம் என்றும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement