சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா நீக்கம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853003.jpg?width=1000&height=625)
புதுடில்லி: சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக பும்ரா நீக்கப்பட்டார். ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி தேர்வாகினர்.
பாகிஸ்தான், துபாயில், வரும் பிப். 19-மார்ச் 9ல் ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் நடக்கவுள்ளது. இந்திய அணி, 'ஏ' பிரிவில் வங்கதேசம் (பிப். 20), பாகிஸ்தான் (பிப். 23), நியூசிலாந்து (மார்ச் 2) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடத்தப்படுகிறது.
இந்திய உத்தேச அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'பார்டர்-கவாஸ்கர்' டிராபியின் போது இவரது முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீண்டு வர தேவையான மறுவாழ்வு பயிற்சியில் ஈடுபட்டார்.
அப்போது இவருக்கு 'ஸ்கேன்' எடுக்கப்பட்டது. பந்துவீசும் அளவுக்கு போதிய உடற்தகுதி இல்லாத நிலையில், சாம்பியன்ஸ் டிராபி பிரதான அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஹர்ஷித் தேர்வு: பும்ராவுக்கு பதில், அனுபவ வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ் (44 போட்டி, 71 விக்கெட்) தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து 'டி-20' (3 விக்கெட், ஒரு போட்டி), ஒருநாள் (6 விக்கெட், 3 போட்டி ) தொடரில் 'வேகத்தில்' அசத்திய இளம் வீரர் ஹர்ஷித் ராணா 23, தேர்வானார்.
இதேபோல உத்தேச அணியில் இடம் பிடித்திருந்த துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டார். ஏற்கனவே இந்திய அணிக்கு கேப்டன் ரோகித், சுப்மன் கில் ஜோடி துவக்கம் தருகிறது. தவிர இந்திய அணிக்கு 5வது சுழற்பந்துவீச்சாளர் தேவைப்படுவதால் ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு, சுழற்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' வருண் சக்ரவர்த்தி தேர்வானார்.
இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராத் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரவிந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
காம்பிர் காரணமா
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணிக்கு ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி தேர்வானதன் பின்னணி தெரியவந்துள்ளது. தலைமை பயிற்சியாளர் காம்பிரின் பரிந்துரைப்படி இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தவிர இவர்கள் இருவரும் ஐ.பி.எல்., தொடரில் காம்பிர் பயிற்சியாளராக இருந்த கோல்கட்டா அணிக்காக விளையாடி உள்ளனர்.
ஐந்து 'சுழல்'
துபாய் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது. கடந்த 2009 முதல் இங்கு நடந்த 58 ஒருநாள் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்கள் 466, சுழற்பந்துவீச்சாளர்கள் 334 விக்கெட் கைப்பற்றினர். ஆனால் இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி என 5 சுழற்பந்துவீச்சாளர் இடம் பெற்றுள்ளனர்.
பயிற்சி இல்லை
சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் விதமாக பாகிஸ்தான் ஷாகீன்ஸ், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகள் பயிற்சி ஆட்டத்தில் (பிப். 14-17) பங்கேற்கின்றன. ஆனால் இந்திய அணி எவ்வித பயிற்சி போட்டியிலும் விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியில் விளையாடியதால், பயிற்சி போட்டி தேவையில்லை என பி.சி.சி.ஐ., முடிவு செய்தது. பிப். 15ம் தேதி துபாய் சென்றடையும் இந்திய அணி, பிப். 20ல் முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
மேலும்
-
வீட்டுவசதி துறைக்கு கூடுதல் செயலர் நியமனம்
-
விடுதிகள் பெயரில் மோசடி சுற்றுலா பயணியரே உஷார்!
-
திருப்பரங்குன்றம் மலையை காக்க சென்னையில் பேரணி ஏன்: நீதிபதி கேள்வி
-
1,000 ஆண்டு கோவில் சுவரை இடித்து புதையல் தேடிய கும்பல் தப்பியோட்டம்
-
மாணவிக்கு பாலியல் தொல்லை 3 மாணவர்கள் மீது 'போக்சோ'
-
பன்னீர்செல்வம் மீது வழக்கு கம்யூ., கோரிக்கை