திருப்பரங்குன்றம் மலையை காக்க சென்னையில் பேரணி ஏன்: நீதிபதி கேள்வி

சென்னை:'திருப்பரங்குன்றம் மலையை காக்க, சென்னையில் பேரணி செல்ல வேண்டிய அவசியம் என்ன?' என, கேள்வி எழுப்பிய, சென்னை உயர் நீதிமன்றம், வேல் யாத்திரை நடத்த போலீசார் அனுமதி வழங்கக் கோரிய, மனு மீதான உத்தரவை, நாளை பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளது.

'திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும்' என்ற கோரிக்கையுடன், பிப்.18 சென்னை தங்கசாலையில் உள்ள, ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து, கந்தகோட்டம் முருகன் கோவில் வரை, வேல் யாத்திரை செல்ல அனுமதி வழங்க, போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரத் இந்து முன்னணி வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் எஸ்.யுவராஜ் வழக்கு தொடர்ந்தார்.இம்மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் முத்தரசு ஆஜராகி, ''ஹிந்துக்களுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தும் நோக்கில், சென்னையில் கந்தகோட்டம் முருகன் கோவிலை நோக்கி, அமைதியான முறையில், வேல் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரியும், போலீசார் அனுமதிக்கவில்லை,'' என்றார்.

காவல் துறை தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜாராகி வாதாடியதாவது:

திருப்பரங்குன்றம் மலையை காக்கக் கோரி, சென்னையில் பேரணி செல்ல, மனுதாரர் அனுமதி கோருகிறார். ஏற்கனவே, இதற்காக மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. அப்போது, பொது அமைதிக்கும், மத நல்லிணக்கத்துக்கும், குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடந்தவர்கள் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரும் மின்ட் பகுதி, போக்குவரத்து நெருக்கடி மிகுந்தது. திருப்பரங்குன்றம் மலையின் உரிமை தொடர்பாக, ஏற்கனவே, 'பிரிவியூ கவுன்சில்' வரை சென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.ஹிந்துக்களும், முஸ்லிம்களும், மத நல்லிணக்கத்துடன் சமூக ஒருமைப்பாட்டை, ஒற்றுமையை நிலைநாட்டி வருகின்றனர்.கோவில் நகரமான மதுரையிலும், சகோதர, சகோதரிகளாக வசித்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலையை காரணமாக்கி, இந்த ஒற்றுமையை குலைத்து விடக்கூடாது. பொது அமைதி, மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை பேணப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் வாதாடினார்.

இதையடுத்து, 'திருப்பரங்குன்றம் மலையை காக்க, சென்னையில் பேரணி செல்ல வேண்டிய அவசியம் என்ன?' என, கேள்வி எழுப்பிய நீதிபதி, மனுதாரர் கோரியுள்ள இடம் நெரிசல் மிகுந்தது என்பதால், வேறு இடத்தை தேர்வு செய்து தெரிவிக்கும்படி அறிவுறுத்தி, வழக்கின் தீர்ப்பை நாளைக்கு தள்ளி வைத்தார்.

Advertisement