காசி தமிழ்ச்சங்கமம் சிறப்பு ரயில்: கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் கவர்னர் ரவி

2

சென்னை: காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் சிறப்பு ரயிலை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மற்றும் காசி இடையிலான வரலாற்று தொடா்புகளை வலுப்படுத்தும் வகையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 3ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி வரும் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை வாரணாசியில் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆயிரம் பேரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சுமார் 220 பேர் கொண்ட முதற்குழு வாரணாசிக்குப் புறப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வாரணாசிக்கு அவர்கள் சென்ற சிறப்பு ரயிலை கவர்னர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவன துணைத் தலைவர் சுதா சேஷய்யன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக பா.ஜ. சார்பில் வாழ்த்து: அண்ணாமலை

தமிழக பா.ஜ., சார்பாக, இன்று பயணிக்கும் பிரதிநிதிகளுக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 24, 2025 வரை நடைபெறும் இந்த 10 நாள் நிகழ்வில், ஐந்து குழுக்களாக (மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கைவினைஞர்கள், தொழில் வல்லுநர்கள், சிறு தொழில்முனைவோர், பெண்கள் சுய உதவிக்குழுக்கள், மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்கள்) வகைப்படுத்தப்பட்ட 1000 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.

தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான காலத்தால் அழியாத பிணைப்பை வலுப்படுத்தும் இந்த புனிதமான மற்றும் கலாச்சார பயணத்தில் ஈடுபடும் அனைத்து பிரதிநிதிகளுக்கும் வளமான மற்றும் மறக்கமுடியாத அனுபவத்தை பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement