இலங்கை முன்னாள் எம்.பி., கொச்சியில் கைது

போலியான முகவரி சான்று கொடுத்து பாஸ்போர்ட் எடுத்த குற்றச்சாட்டில், இலங்கை முன்னாள் எம்.பி. திலீபன், தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த, 2019ல் இலங்கையைச் சேர்ந்த பலர், மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெற்றனர். ஆனால், பாஸ்போர்ட் பெறுவதற்காக அவர்கள் அளித்த முகவரி போலியானது என, பின்னர் கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட சான்றிதழ்களும் போலி என தெரியவந்தது.

இதுதொடர்பான வழக்கில், இலங்கையின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் எம்.பி., திலீபன் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, இந்தியாவில் தங்கியிருந்த திலீபன், வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருப்பதற்காக, நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது


கடந்த 11ல் கொச்சி விமான நிலையம் வந்த திலீபனை, குடியுரிமை அதிகாரிகள் பிடித்து, மதுரை கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட திலீபன், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


- நமது நிருபர் -

Advertisement