ஐ.ஆர்.பி.என்., கமாண்டன்ட்கள் ஏனாம், மாகிக்கு மாற்றம்

புதுச்சேரி : ஐ.ஆர்.பி.என்., உதவி கமாண்டன்ட் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

புதுச்சேரியில் ஐ.ஆர்.பி.என்., பிரிவு கடந்த 2005ம் ஆண்டு துவக்கப்பட்டது. அப்போது, பணியில் சேர்ந்தவர்கள் தற்போது உதவி சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு உயர்ந்துள்ளனர். பிறகு, 2015ம் ஆண்டு சேர்ந்தவர்கள் ஏட்டு நிலைக்கு வந்துள்ளனர். அதன்பிறகு ஐ.ஆர்.பி.என்., தேர்வு நடக்கவில்லை.

மேலும், அமைச்சக ஊழியர்கள், அலுவலக ஊழியர்கள் நியமிக்கவும், ஐ.ஆர்.பி.என்., தலைமையகம் எந்தவித நடவடிக்கை எடுக்காமல், கோப்புகளை கிடப்பில் வைத்துள்ளனர்.

ஐ.ஆர்.பி.என்., போலீஸ்காரர்களில் சிலருக்கு மட்டும் தொடர்ச்சியாக பணியும், சிலர் விடுமுறை அனுபவிப்பது என, முறைகேடு நடப்பதாக ஏராளமான புகார்கள் போலீஸ் தலைமையகத்திற்கு சென்றது.

ஐ.ஆர்.பி.என்., தலைமையக உதவி கமாண்டன்ட் ரீனிஷ்சந்திரா, செந்தில்முருகன் இருவர் மீதான, புகார்கள் குறித்து டி.ஜி.பி., ஷாலினிசிங் விசாரணை மேற்கொண்டு வந்தார். இதனிடையே, கடந்த 2024ம் ஆண்டு திறக்கப்பட்ட ஐ.ஆர்.பி.என்., தலைமையக கட்டடத்தை புதுப்பித்து, டி.ஜி.பி., மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மீண்டும் திறந்து வைத்தனர். இந்நிலையில், ஐ.ஆர்.பி.என்., உதவி கமாண்டன்ட் ரீனிஷ்சந்திரா ஏனாமிற்கும், உதவி கமாண்டன்ட் செந்தில்முருகன் மாகிற்கும் மாற்றி டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவிட்டார்.

Advertisement