210 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதற்கு திருவாலங்காடில் 1,000 மரக்கன்றுகள் நட திட்டம்

திருவாலங்காடு:திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்டது அரக்கோணம் ---- திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை. இச்சாலை 24 கி.மீ., தூரம் கொண்டது. இச்சாலையில் திருவாலங்காடு சர்க்கரை ஆலை சந்திப்பில் இருந்து, அரக்கோணம் வரையிலான 9 கி.மீ., சாலையை முதற்கட்டமாக நான்குவழிச் சாலையாக மாற்றும் பணி, முதல்வரின் சாலை விரிவாக்க திட்டத்தின்கீழ் 68 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது.

இங்கு சாலை விரிவாக்கப் பணியின் போது நெடுஞ்சாலையின் இருபுறமும் 200க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

நாடு முழுதும் வெப்பமயமாதல் அதிகரித்து வருவதால், அகற்றப்படும் மரங்களுக்கு பதிலாக, ஒரு மரத்திற்கு 3 வீதம் நடவு செய்யப்பட்டு தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திருவள்ளூர்- - அரக்கோணம் நான்குவழிச் சாலையில் அகற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக, புதிதாக மரங்கள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருத்தணி கோட்ட நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் ரகுராமன் கூறியதாவது:

அரக்கோணம் சாலையின் இருபுறமும் புங்கை, வேப்பம், பூவரசம், புளியம் என 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. இந்த மரங்கள் ஆந்திராவின் கர்னூல் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த மரக்கன்றுகளை தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பராமரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 210 மரங்கள் மட்டுமே வெட்டி அகற்றப்பட்ட நிலையில், அதற்காக கூடுதலாக 790 மரக்கன்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement