வேண்பாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க கோரிக்கை

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட வேண்பாக்கம் பகுதியில், 50 ஏக்கர் பரப்பில், சிறிய ஏரி உள்ளது. மழைக்காலங்களில் ஏரியில் தேங்கும் மழைநீர், நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கும், அருகில் உள்ள விவசாய நிலங்களின் பாசனத்திற்கும் பயன்படுகிறது.

கடந்த ஆண்டு பெய்த மழையால், ஏரியில் தண்ணீர் தேங்கி உள்ளது. பொன்னேரி நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த ஏரி பராமரிப்பு இன்றி பாழாகி வருகிறது. ஏரி முழுதும் ஆகாயத்தாமரை மற்றும் புதர்கள் சூழ்ந்து பராமரிப்பு இன்றி கிடக்கிறது.

ஏரியை சுற்றிலும் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. குடியிருப்புகளின் குப்பை கொட்டும் இடமாகவும், கழிவுநீர் குட்டையாகவும் மாறி வருகிறது.

ஏரியை சுற்றிலும் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில், உரிய முறையில் பராமரிக்காவிட்டால், நாளடைவில் ஆக்கிரமிப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளது.

நகராட்சி நிர்வாகம் ஏரியை சீரமைத்து நிலத்தடி நீர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement